துன்பங்களை விலக்கும் கந்த சஷ்டி கவசம்

‘கவசம்’ என்பது, நம்மை காப்பாற்றக்கூடிய அணிகலனைக் குறிப்பதாகும். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ள கவசம் அணிந்து போரிட்டுள்ளனர். அதே போல் ‘கந்த சஷ்டி கவசம்’ என்பது நம்மை தீமைகளில் இருந்து, துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுவதாகும்.

Update: 2020-02-04 03:45 GMT
கந்தசஷ்டி கவசத்தை அருளியவர், ஸ்ரீ தேவநாய சுவாமிகள். இவர் பெரிய முருக பக்தர். இந்த சஷ்டி கவசத்தை தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் பாராயணம் செய்து வந்தால், முருகப்பெருமானின் அருள்காட்சி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சஷ்டி என்பது அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு அடுத்த ஆறாம் நாள் வரும் திதியாகும். ஒரு வரது ஜாதகத்தில் 6-ம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு ஆகியவற்றை குறிக்கும். செவ்வாய் ரோகக்காரகன். இவருக்குரிய தெய்வம் முருகப்பெருமான். 6-ம் இடத்து தோஷங்களை போக்கும் சக்தி முருகப்பெருமானுக்கு உண்டு.

முருகப்பெருமானுக்கு உகந்த நாள் சஷ்டி. இது ஆறாவது திதியாகும். முருகனுக்கு ஆறு முகங்கள். ‘சரவணபவ’ என்னும் ஆறு அட்சரங்களைக் கொண்டவர். ஆறு படை வீடு உரியவர். ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்.

நாம் முருகப்பெருமானின் திருவடியை பற்றிக் கொண்டால், இல்லத்தில் கடன், வியாதி, எதிரிகள் பயம் விலகும்.

-ஜெ.மாணிக்கவாசகம்

மேலும் செய்திகள்