அரசியல் களத்தில் ரஜினிகாந்த்

1977-ல் முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவியேற்ற நேரத்தில், ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

Update: 2017-05-30 23:30 GMT
அந்தபடத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததால்தான், பதவியேற்பு விழாவே சிலநாட்கள் தள்ளிப்போனது. அதைப்போலத்தான் ரஜினிகாந்தும், “தனது 164-வது படமாகிய ‘காலா’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு, அரசியலுக்கு வருவார். அந்தப்படத்தின் தாக்கம் நிச்சயமாக எல்லோருடைய அரசியல் உணர்வுகளையும் தட்டியெழுப்பும். அதில் வரும் பல ‘பஞ்ச் டயலாக்குகள்’ மக்களை அவருக்கு ஆதரவாக ஈர்க்கும்’ என்றெல்லாம் இப்போதே பரவலாக பேசப்படுகிறது. இந்த ‘காலா’ கதை ஒரு கற்பனைக்கதை.

நெல்லையில் இருந்து பிழைப்புதேடி பம்பாய் சென்ற ஒரு ஏழைப்பங்காளனின் கதை என்று கூறப்பட்டது. ஒருபக்கம் ஏழைப்பங்காளன். மறுபக்கம் அநீதிகளை தட்டிக்கேட்கும் ஆபத்பாந்தவன். தமிழ்நாட்டில் இருந்து பிழைப்புதேடி யார் பம்பாய் வந்தாலும், அவர் களுக்கு சாப்பாடுபோட்டு வாழ வழி செய்த உத்தமர். தமிழக மக்களுக்கு எதிராக மராட்டியர்களால் என்ன அநீதி விளைவிக்கப்பட்டாலும், அதையெல்லாம் எதிர்த்து போர் தொடுத்தவர் கதைதான் இது என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்பு தொடங்கி ஓரிரு நாட்களுக்குள்ளேயே இது உமரிக்காட்டைச் சேர்ந்த திரவிய நாடார் கதை, ராஜபாண்டி நாடார் கதை, எஸ்.கே.ராமசாமி கதை என்று பலருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டு வந்தாலும், டைரக்டர் ரஞ்சித்தை பொறுத்தவரை, இது கற்பனைக்கதை என்றுதான் கூறு கிறார். ஆக, தமிழர்களுக்கு பாதுகாவலனாக விளங்கிய நல்லவர்கள் அனைவரின் கதையையும் கலந்துதான், இந்த ‘காலா’ கதை உருவாகி இருக்கிறது என்று கூறு கிறார்கள். ‘காலா’ என்றால் கருப்பு. காமராஜரையே காலா காந்தி, அதாவது கருப்பு காந்தி என்று வடநாட்டவர்கள் கூறுவார்கள். அதுபோல இந்த ‘காலா’ படம் ரஜினி காந்துக்கும் ஒரு அரசியல் திருப்புமுனை என்பதுதான் எல்லோருடைய கணிப்பும் ஆகும். ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் முதலாவதாக ரஜினிகாந்த் நடித்தார். அந்த காலங்களில் சிவப்பாக இருப்பவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க முடியும் என்ற ஒரு தார்ப்பரியத்தை தகர்த்தெறிந்து, கருப்பாக இருப்பவரும் கதாநாயகனாக முடியும் என்ற முத்திரையை பதித்தவர் ரஜினிகாந்த்.

1996-ம் ஆண்டு முதலே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பரவலாக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஒவ்வொரு படமும் வெளியே வரும்போது,
ஏதாவது ஒரு டயலாக் கூறுவார். உடனே எல்லோரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று கூறுவார்கள். அந்தப்படமும் ஓடும். அதோடு அந்தப்பேச்சும் அடங்கிவிடும். இந்த மாதம் 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார். அப்போது அவர் முதன்முதலாக, “நான் ஒரு வேளை அரசியலுக்கு வந்தால் பணம் சேர்க்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன்” என்று பரபரப்பாக பேசினார். “அரசியலுக்கு வந்தால்” என்று கூறியதில் இருந்தே, அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை முதல்நாள் தெரிவித்த ரஜினிகாந்த், “நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக இருங்கள்” என்று இறுதி நாளில் கூறிவிட்டார்.

இந்த நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்று சில கருத்துகளை தெரிவித்தார். பா.ஜ.க. தலைவர்களை பொறுத்தமட்டில், ரஜினிகாந்த் பா.ஜ.க.வில் சேர்ந்தால் வரவேற்போம் என்று கூறுகிறார்கள். ஆனால், அரசியலுக்கு ரஜினிகாந்த் நுழைவது

உறுதியாகிவிட்டால், நிச்சயமாக தனிக்கட்சி தான் தொடங்குவார். ஆனால், அந்தக்கட்சி பா.ஜ.க.வுடன் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்துக்கொள்ளும் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் எல்லா யூகங்களுக்கும் முடிவு ‘காலா’ படம் வெளிவந்தவுடன் ரஜினிகாந்த் சொல்லப்போகும் அறிவிப்பில்தான் இருக்கிறது. மொத் தத்தில் சாதி, மதம், இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எல்லோருடைய ஆதரவும் பெற்றுள்ள ஒருவர் அரசியலுக்கு வருவதில் தவறல்ல என்பதுதான் பரவலான கருத்தாக இருக்கிறது.

மேலும் செய்திகள்