வீட்டை சுற்றிலும் காலியிடம்.. அறைகளுக்குள் காற்றோட்டம்

பொதுவாக, நமது பகுதிகளில் வீடுகள் கட்டும்போது, சமையலறை அளவு, ஹாலின் அளவு, படுக்கையறைக்கான வசதிகள், உட்புறம் மற்றும் வெளிப்புற சுவர்களின் வண்ணம் போன்ற வி‌ஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

Update: 2017-04-28 22:00 GMT
பொதுவாக, நமது பகுதிகளில் வீடுகள் கட்டும்போது, சமையலறை அளவு, ஹாலின் அளவு, படுக்கையறைக்கான வசதிகள், உட்புறம் மற்றும் வெளிப்புற சுவர்களின் வண்ணம் போன்ற வி‌ஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இது போன்றவற்றை கவனிக்கும் அளவிற்கு வீட்டைச்சுற்றி அமைக்கப்படும் தோட்டம், மரம், செடி, கொடிகள், இதர அலங்கார செடிகள் போன்றவை அவ்வளவாக கவனிக்கப்படுவதில்லை. அதன் பின்னணியில் சதுரஅடி மனையின் விலை மதிப்பும், நடைமுறை சிக்கல்களும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

பக்கத்து மாநிலங்கள்

பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகியவற்றில் வீட்டை சுற்றி அமைக்கப்படும் தோட்டம் அவசியமானது என்று மக்களால் உணரப்பட்டுள்ளது. பசுமையான மரம், செடி, கொடிகள் போன்ற சூழல் இல்லாமல் அவர்கள் வீடுகளை அமைப்பதில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குடும்ப ஆரோக்கியம் கருதி அனைத்து வீடுகளிலும் மரங்கள் மற்றும் செடிகள் வளர்ப்பது அவசியம் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் சுற்று சூழலியலாளர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதை நமது அனைத்து வீடுகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டிய அளவில் புவி வெப்பம் அதிகரித்துள்ளது.    

இயற்கை சக்திகள்

வீடுகளுக்குள் வாழ்க்கை என்ற நிலையில், வீடுகளுக்கு வெளியே சுற்றிலும் உள்ள காலியிடம் இயற்கை சக்திகள் எளிதாக வீடுகளுக்குள் வருவதற்கு வழி செய்கிறது. நம் வீட்டை சுற்றிலும் காற்று மற்றும் வெளிச்சம் போன்ற இயற்கை சக்திகள் பரவும்போது ஆரோக்கியமான சூழல் அங்கு நிலவும் என்று இயற்கை ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள். வீடு கட்ட இடம் வாங்கும்போது, வீட்டு தோட்டம் அல்லது செடிகள், மரங்கள் ஆகியவற்றை வைத்து பராமரிப்பதற்கான திட்டமிட்டு வாங்குவது எதிர்கால நலன்களுக்கு உகந்ததாக இருக்கும். பெருநகர அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குபவர்கள், குடியிருப்பை சுற்றி காலி இடம், தோட்டம் போன்ற அம்சங்களை கவனித்து வாங்கலாம்.

ஆரோக்கிய சூழல்

சுற்றுப்புற சூழல் பாதிப்படைந்த நிலையில், சிறிய பட்ஜெட் அல்லது பெரிய பட்ஜெட் வீடு எதுவானாலும் மரம், செடி, கொடிகள் பராமரிப்பதற்கு போதுமான காலியிடம் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அத்துடன் கட்டுமான விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அவ்வாறு காலி இடம் விடப்படுவதால் ஏற்படும் காற்றோட்ட வசதிகள் பலவிதமான மருத்துவ செலவுகளை தவிர்க்க உதவும் என்ற கருத்தை மனதில் கொள்ளவேண்டும். வசிப்பதற்காக அமைக்கப்படும் வீடுகளில் ஆரோக்கியமான சூழலும் அவசியம்.           

வண்ண மலர்கள்

ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்ததும் அழகான செடிகளில் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை பார்த்தால், அந்த நாளும் ஒரு வண்ண மயமாகவே இருக்கும் என்ற உளவியலை நாம் மறுப்பதற்கில்லை. மேலும், மாலையில் பணிகளை முடித்து விட்டு வீடு திரும்பும்போது, தோட்டத்தில் உள்ள பசுமையான செடிகள் மனதில் புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன என்பது பலருக்கும் அனுபவமாக இருக்கும். கூடுதல் பலனாக பசுமையான செடி, கொடிகள் சுற்றுப்புறத்தில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை பெற்றவை என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் செய்திகள்