கட்டிட விரிசலை உண்டாக்கும் இயற்கை சக்திகள்

1. மரங்கள் சூழ்ந்த பகுதிகள் அல்லது பெரிய மரங்களின் அருகில் கட்டிடங்கள் அமைக்கப்படும்போது மரங்களின் வேர்களால் பாதிக்கப்படாதவாறு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம்.

Update: 2017-10-14 00:45 GMT
1. மரங்கள் சூழ்ந்த பகுதிகள் அல்லது பெரிய மரங்களின் அருகில் கட்டிடங்கள் அமைக்கப்படும்போது மரங்களின் வேர்களால் பாதிக்கப்படாதவாறு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம். பொதுவாக, மரங்களின் வேர்கள் வீட்டின் அடிப்பகுதியில் ஊடுருவி வளர்வதால், அஸ்திவாரத்திலும், சுவர்களிலும் விரிசல்கள் வரலாம். வேர்கள் வளர்ச்சிக்கு ஏற்ப விரிசலின் அளவும் பெரியதாக மாறக்கூடியது என்ற நிலையை மனதில் கொள்ளவேண்டும்.

2. தரம் குறைந்த கட்டுமான பொருட்களினாலும் சுவரில் விரிசல்கள் உண்டாகலாம். கட்டுமானத்துக்கான சிமெண்டு கலவையில் மணல், சிமெண்டு ஆகியவற்றை சரியான விகிதத்தில் சேர்க்காதது, குறைந்த திறன் கொண்ட கம்பிகள், தகுந்த நேரத்தில் கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்றி வலுப்படுத்த தவறியது, கட்டிடத்திற்கு தாமதமாக பூச்சு வேலைகள் செய்வது போன்ற காரணங்களால், கட்டிட வலிமை குறைவதோடு விரைவில் விரிசல்களும் ஏற்படலாம்.

3. தட்பவெட்ப சூழ்நிலைகள் சில நேரங்களில் சுவர்களில் விரிசலை ஏற்படுத்துகின்றன. பருவமழை, புயல் காலங்களில் தொடர்ந்து பெய்யும் மழை சுவர்களை நனைப்பதினால் ஈரப்பதம் அதிலேயே தங்கி விடுகிறது. அதனாலும் சுவர்கள் விரிவடைந்து விரிசல்கள் ஏற்படுகின்றன.

4. அனல் பறக்கும் வெயில் காலங்களில் அதிக வெப்பம் காரணமாக, சுவர்களுக்குள் இருக்கும் ஈரப்பதம் ஆவியாகிறது. அதனால் சுவர் அமைப்புகள் தமது இயல்பான நிலையிலிருந்து சுருங்குகின்றன. சுவர் அமைப்புகள் விரிவடைவதையும், சுருங்குவதையும் வெறும் கண்களால் கண்டுபிடிக்க முடியாது. மேலும், சுவர்களில் உள்ள கட்டுமான பொருட்களாலும் விரிசல்கள் ஏற்படலாம். பொதுவாக, இவ்வகை விரிசல்கள் கட்டுமானத்தை அதிகமாக பாதிப்பதில்லை. 

மேலும் செய்திகள்