வீடு–மனையின் பத்திரங்களை பதிவு செய்ய அவசியமான சான்றுகள்

வீடு அல்லது மனைகளை குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு விற்பனை செய்யப்படும்போது அதற்கான உரிமை மாற்றம் குறித்து சார்–பதிவாளர் அலுவலகத்தில் ஆவணமாக பதிவு செய்யப்படும் முறை பத்திரப்பதிவு ஆகும்.

Update: 2018-02-17 00:00 GMT
 அலுவலக நடைமுறைகளின்போது  அதற்கான வெவ்வேறு சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியதாக இருக்கும். அவற்றைப்பற்றிய பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

1) வீடு–மனை விற்பனை குறித்து தட்டச்சு செய்த அல்லது கைகளால் எழுதப்பட்ட பத்திரம்.

2) வீடு–மனை ஆகியவற்றின் முழு விவரங்கள் அடங்கிய படிவம், வரைபடம், மனைப்பிரிவின் அங்கீகாரம் பெற்ற நிலத்தின் வரைபடம்.

3) பதிவுக் கட்டணம் ரூ.1000–க்கு மேல் இருந்தால் அதற்கான கேட்பு வரைவோலை (Demand Draft), முத்திரைத் தீர்வை அதாவது பத்திர மதிப்பீடு குறைவாக இருப்பது அறியப்பட்டு, அந்த தொகை ரூ. 1000–க்கும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதற்கான கேட்பு வரைவோலை.

4) முத்திரைத் தீர்வை அதாவது பத்திர மதிப்பீடு குறைவாக இருப்பதாக அறியப்படும் நிலையில், அதற்குரிய கட்டணத்தை செலுத்த தனிப்பட்ட விண்ணப்பம்.

5)ஆவணங்களுக்கான தாய்ப்பத்திரங்கள் அவசியம். ஒருவேளை அவை வங்கியில் இருக்கும் பட்சத்தில் அதற்குரிய வங்கிச்சான்று மற்றும் காணாமல் போயிருந்தால் அதற்கான காவல்துறையின் சான்று.

6) ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் புகைப்படங்கள். அரசு சார்புடையவராக இருந்தால் அவர்களது அடையாள அட்டைகள் ஒரிஜினல் மற்றும் நகல்கள்.

7) ஆவணதாரர்களை நன்றாக அறிந்த இரண்டு சாட்சிகள்.

8) பத்திரப்பதிவு செய்வதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் வரை சொத்து விற்பவர் பெயரில் பெறப்பட்ட வில்லங்கச் சான்றிதழ்.

9) விவசாய நிலமாக இருந்தால் பட்டா உள்ளிட்ட வருவாய்த்துறையின் இதர சான்றுகள்.

10) வீடாக இருந்தால் எழுதிக்கொடுப்பவர் பெயரில் உள்ள சொத்துவரி, தண்ணீர் வரி, மின் இணைப்பு எண் ஆகிய விவரங்கள்.

11) வாரிசு முறைப்படி சொத்து கிடைத்திருந்தால், அதற்கான வாரிசு சான்றிதழ், மற்றும் முந்தைய உரிமையாளரின் இறப்புச் சான்றிதழ்.

12) ஆலய நிலம் மற்றும் வக்பு நிலம் என்றால் அதற்குரிய தடையில்லா சான்று (NOC)

13) விவசாய நிலம், மனைப்பிரிவாக மாற்றப்பட்டிருந்தால் அதற்குரிய மாவட்ட ஆட்சியரின் தடையின்மை சான்று.

14) மனைப் பிரிவுக்கான DTCP அல்லது CMDA ஆகியவற்றின் அனுமதி சான்று.

15) ஆவணப் பதிவுகளின்போது முதுமை அல்லது உடற்குறை காரணமாக பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வர இயலாதவர்கள் அல்லது மருத்துவமனைகளில் உள்ளவர்களுக்காக சார்–பதிவாளர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வர வேண்டுமென்றால் முன்பே தக்க சான்றுகளுடன், உரிய கட்டணமும் செலுத்தப்பட்டு சார்–பதிவாளரிடம் விண்ணப்பம் செய்து அனுமதி பெறவேண்டும்.

16) இரண்டாம், மூன்றாம் படி ஆவணங்கள் (Duplicate, Triplicate) பதிவு செய்ய தனிப்பட்ட விண்ணப்பம்.

17) ஆவணதாரர்களில் யாராவது பதிவு செய்யப்படும் நாளன்று வர இயலாத சூழலில், பத்திர அலுவலகத்துக்கு வந்தவர்களை வைத்து பதிவை முடித்து, ஆவணத்தை நிலுவையில் வைப்பதற்கு தனிப்பட்ட விண்ணப்பம்.

18) பொது அதிகார பத்திரம் மூலம் பதிவு செய்யும்பொழுது, அதிகாரம் வழங்கியவர் உயிருடன் இருப்பதற்கான சான்று.

மேலும் செய்திகள்