வாஸ்து குறிப்பிடும் தெருக்குத்து மற்றும் தெருப்பார்வை

வீடு, மனை அல்லது அடுக்குமாடி ஆகியவை இரண்டு அல்லது மூன்று தெருக்கள் இணையும் பகுதியில் அமைந்திருக்கும் பட்சத்தில் அவற்றிற்கு தெருப்பார்வை அல்லது தெருக்குத்து ஏற்படலாம் என்று வாஸ்து சாஸ்திர வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Update: 2018-09-01 05:07 GMT
வாஸ்து சாஸ்திர ரீதியாக தெருப்பார்வை என்பது நன்மைகளை அளிப்பதாகவும், தெருக்குத்து என்பது பாதிப்புகளை தருவதாகவும் சொல்லப்படுகிறது.

பூமியில் ஏற்படும் சலனங்கள்

பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருவதுடன், குறிப்பிட்ட அளவு வடகிழக்காக அமைந்த சாய்மான நிலையில் தன்னையே சுற்றிக்கொள்கிறது. அதன் காரணமாக பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள கட்டிடங்களில், அதனதன் அமைவிடங்களுக்கேற்ப வடகிழக்கை மையமாக கொண்ட சக்தி அலைகளின் தாக்கங்களால் சலனங்கள் ஏற்படுகின்றன. அதன் அடிப்படையில் உண்டாகும் விளைவுகளை நன்மை தரும் உச்சம் என்றும், பாதிப்புகளை அளிக்கும் நீச்சம் என்றும் வாஸ்து நிபுணர்கள் இரு பிரிவாக வகைப்படுத்தி உள்ளனர்.

திசைகளின் பெயர்கள்

பொதுவாக, வீடு அல்லது மனையை ஒட்டியபடி சாலை, தெரு அல்லது பெரிய அளவுள்ள வீதி அமைந்திருந்து அது சம்பந்தப்பட்ட இடம் அல்லது வீட்டுக்கு நேர் எதிராக இருப்பது தெருக்குத்து அல்லது தெருப்பார்வை என்று அதன் அமைப்புக்கேற்ப சொல்லப்படும். அவை, வடக்கு ஈசானியம், கிழக்கு ஈசானியம், கிழக்கு அக்னி, தெற்கு அக்னி, தெற்கு நைருதி, மேற்கு நைருதி, மேற்கு வாயவியம், வடக்கு வாயவியம் என அதற்குரிய திசைகளின் பெயரால் குறிப்பிடப்படுகிறது.

உச்சம்-நீச்சம் பகுதிகள்

அதாவது, மனையின் நான்கு திசைகளில் கிழக்கு அல்லது வடக்கு சார்ந்த உச்ச பகுதிகளில் ஏற்படுவது தெருப்பார்வை என்றும், மேற்கு அல்லது தெற்கு ஆகிய நீச்ச பகுதிகளை சார்ந்து ஏற்படுவது தெருக்குத்து என்றும் சொல்லப்படுவது வழக்கம். அவை பற்றிய தகவல்களை கீழே காணலாம்.

நன்மை தரும் நான்கு பகுதிகள்

கிழக்கு ஈசானியம் (கிழக்கு திசையின் வடக்கு முனை) மற்றும் வடக்கு ஈசானியம் (வடக்கு திசையின் கிழக்கு முனை) ஆகிய பகுதிகளில் ஏற்படும் தெருப்பார்வை நன்மைகளை ஏற்படுத்தும்.

தெற்கு அக்னி (தெற்கு திசையின் கிழக்கு முனை) மற்றும் மேற்கு வாயவியம் (மேற்கு திசையின் வடக்கு முனை) ஆகிய பகுதிகளும் தெருப்பார்வை என்ற நிலையில் நன்மைகளை அளிக்கிறது.

பாதிப்பு தரும் நான்கு பகுதிகள்

மேற்கு நைருதி (மேற்கு திசையின் தெற்கு முனை) மற்றும் தெற்கு நைருதி (தெற்கு திசையின் மேற்கு முனை) ஆகிய பகுதிகளில் உண்டாகும் தெருக்குத்து பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல, கிழக்கு அக்னி (கிழக்கு திசையின் தெற்கு முனை) மற்றும் வடக்கு வாயவியம் (வடக்கு திசையின் மேற்கு முனை) ஆகிய பகுதிகளும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கச்சிதமான கணக்கீடு

மேற்கண்ட நிலைகளில் நன்மைகள் அல்லது பாதிப்புகள் ஆகிய பலன்களை தீர்மானம் செய்ய வீடு அல்லது மனையின் எந்த ஒரு குறிப்பிட்ட திசைக்கு தெருப்பார்வை அல்லது தெருக்குத்து உள்ளது என்று கச்சிதமாக கணக்கிட வேண்டும். இந்த விஷயத்தில் உச்சம் மற்றும் நீச்சம் ஆகியவற்றின் அளவீடுகளின்படி, எட்டு திசைகளின் தன்மைகளையும் கணக்கில் கொண்டு வாஸ்து நிபுணர்கள் நன்மை அல்லது பாதிப்பை தீர்மானம் செய் கிறார்கள். 

மேலும் செய்திகள்