கடனுக்கான தவணை முறையில் வங்கிகள் அளிக்கும் சலுகை

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட வீட்டுக்கடன் உள்ளிட்ட இதர கடன்களை அவற்றிற்குரிய தவணை காலம் வரையில் அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை மாதாமாதம் தவறாமல் செலுத்தி வரவேண்டும் என்பது பொதுவான நடைமுறையாகும்.

Update: 2018-10-13 09:33 GMT
ஆனால், எதிர்பாராத காரணங்களால் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவர்களது கடனுக்கான மாத தவணைகளை செலுத்துவதில் கால தாமதம் ஏற்படலாம்.

வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்

பொதுவாக, வங்கிகள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட பாதிப்புகளை கவனத்தில் கொள்வதுடன், அவற்றை வங்கியிடம் முறையாக தெரிவிக்கும் வாடிக்கையாளர் அல்லது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடனை திருப்பி செலுத்துவதில் வங்கிகள் அவற்றின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு குறிப்பிட்ட கால அவகாசத்தை அளிக்கின்றன.

‘பலூன் ரீ-பேமெண்டு’

அவ்வாறு வங்கிகள் அளிக்கும் சலுகைகளில் பலூன் ரீ-பேமெண்டு (Balloon Re-payment) என்ற முறையும் உள்ளது. அதாவது, குறுகிய கால கடன்களுக்கான தவணையை வட்டி மற்றும் அசல் தொகையை மாதாமாதம் செலுத்துவது சிரமம் என்ற நிலையில் வாடிக்கையாளருக்கு சில காலம் கழித்து கிடைக்கக்கூடிய பொருளாதார வரவுகளை கணக்கில் கொண்டு, கடன் முடிவடையும் காலகட்டத்தில் பெரும் தொகையை ஒரே தவணையாக இந்த முறையில் திருப்பி செலுத்தலாம்.

மேலை நாடுகளில் உள்ள திட்டம்

இந்த முறையில் மாதாமாதம் வட்டியை மட்டும் குறிப்பிட்ட காலத்துக்கு செலுத்திக்கொண்டு வந்து, பின்னர் கிடைக்கும் பொருளாதார வரவுகளை பயன்படுத்தி மீதமுள்ள கடன் தொகையை ஒரே தவணையாக செலுத்தி கடன் கணக்கை முடித்துக்கொள்ளலாம். கடைசியில் பெரும் தொகையை திருப்பி செலுத்தும் அடிப்படையில் இந்த திட்டம் ‘பலூன் ரீ-பேமெண்டு’ என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வகையிலான கடன் திட்டம் நமது நாட்டில் அவ்வளவாக நடைமுறையில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பயன்

மேலை நாடுகளில் பரவலாக உள்ள இத்திட்டம் தனி நபர்களை விடவும் வீடு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பயன்தருவதாக குறிப்பிடப்படுகிறது. தற்காலிகமாக கடன் தொகை குறைவாக இருந்தாலும், முடிவில் பெரும் தொகை செலுத்தப்பட வேண்டும் என்பதால் இந்த முறை சற்றே ‘ரிஸ்க்’ ஆனது என்று வங்கியியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்