அழகுச் செடிகள் வளர்க்க எளிய குறிப்புகள்
பசுமையான செடிகளை வீடுகளில் உள்ள ஹால் மற்றும் அறைகளில் வளர்ப்பது கண்களுக்கும், மனதுக்கும் குளிர்ச்சியை அளிக்கும் விஷயமாகும்.
ஆசைப்பட்டு வாங்கி வந்த அழகு செடிகளை உரிய விதத்தில் பராமரிப்பு செய்து வளர்க்க வேண்டியது அவசியம். தக்க மண் தேர்வு மற்றும் உரம் இடுவது போன்றவற்றை கச்சிதமாகச் செய்ய வேண்டும். செடிகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் கவனிக்க வேண்டிய எளிய விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.
* கடைகளில் வாங்கி வரும் செடியை தொட்டியில் நடுவதற்கு முன்னர் மண்ணில், கரும்புச் சக்கையை சேர்த்து கலந்து நடலாம். அதன் மூலம் தண்ணீர் விடத் தவறிய சமயங்களில், நீரை உறிஞ்சி தக்க வைக்கும் தன்மை கொண்ட கரும்புச் சக்கையில் உள்ள நீரை செடியின் வேர்கள் எடுத்துக்கொள்ளும்.
* செடி வளர்ப்பில் பலரும் சரியான உரத்தை தேர்வு செய்வதில் குழப்பம் அடைகிறார்கள். இதில் சிம்பிளான வழி என்னவென்றால், சமையலறை காய்கறிக் கழிவுகளை தொட்டியில் இட்டு, மாட்டுச்சாணம் அல்லது வறட்டியை தூள் செய்து அதில் கலந்து இயற்கை உரத்தை தயார் செய்து கொள்ளலாம்.
* தொட்டியில் மீன் வளர்ப்பவர்கள், தொட்டி கழுவிய தண்ணீர் அல்லது மீன் கழிவுகளை நேரடியாக தொட்டியில் போடுவது செடிகளுக்கு ஆபத்தானது. அதனால், மீன் கழிவுடன் சம அளவு வெல்லம் கலந்து தொட்டியில் ஓரிரு வாரங்கள் வைக்க வேண்டும். பின்னர் உரமாக மாற்றம் பெற்ற அதை நீரில் கலந்து செடிகளுக்கு விடலாம்.
* செடிகள் செழிப்பாக வளர மண் புழு உரத்தை தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு போடலாம்.
* அறையில் உள்ள செடிகளை இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளிப்புற இயற்கை வெளிச்சத்தில் சிறிது நேரம் எடுத்து வைக்க வேண்டும். அப்போது செடியின் மீது ‘வாட்டர் ஸ்பிரே’ செய்யலாம்.
* எப்போதுமே அறையில் உள்ள செடிகளுக்கு வெளிச்சம் கிடைக்கும்வகையில் ஜன்னல் அருகில் வைப்பது நல்லது.