வீடு, வீட்டுமனை வாங்குபவர்கள் கவனிக்க..

Update: 2023-04-22 01:13 GMT

அசையா சொத்து வாங்கும்போது மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது அது அமைந்திருக்கும் இடம். குடியிருப்புகள் நிறைந்த இடமா? வணிக நிறுவனங்கள் என்றால் சில்லறை கடைகள் நிறைந்த இடமா? வணிக நிறுவனங்கள் உள்ள இடங்களா? நகரின் முக்கிய தெருவில் இருக்கிறதா நாம் வாங்கப் போகும் இடம் அல்லது குடியிருப்பு மிக எளிதாக மற்றவர்களால் கண்டறியக்கூடிய இடமாக இருக்கிறதா என்பவை தான் மிக முக்கியம். இவைதான் அந்த இடத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.

சரி இப்போது நாம் என்ன மாதிரி இடங்களை வாங்கினால் நமக்கு பயனளிக்கும் என்பதை பார்ப்போம்.

நம்மிடம் இருக்கும் பணத்திற்கு நகரின் முக்கிய இடத்தில் ஒரு அடுக்கக குடியிருப்பு. அதுவும் கூட ஒரு படுக்கை அறையோ இரண்டு படுக்கை அறையோ உள்ளது தான் வாங்க முடியும். அதே நேரத்தில் அதே குறிப்பிட்ட பணத்தில் புறநகர் பகுதியில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி தனி வீடு கட்டிக் கொள்ள முடியும் என்றால் எது சிறந்தது?

இது அவரவர்களின் தேவையையும் மனோநிலையையும் பொறுத்து முடிவெடுக்கலாம். மேற்படி இரண்டில் உள்ள சாதக பாதகங்கள் பார்ப்போம்.

நகரின் முக்கிய பகுதியில் நீங்கள் பணி புரியும் மற்றும் உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் அருகிலேயே குறிப்பிட்ட அடுக்கக குடியிருப்பு இருக்கிறது என்றால் அது நன்மையே. காரணம் உங்களுக்கு தினப்படி அலுவலகம் வீடு என சென்று வரும் நேரத்தை குறைக்கும். பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும். குழந்தைகள் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தூரம் மிகக் குறைவாக இருக்கும் போது அவர்களை கவனிப்பதும் அவர்களை வேறு சில தனிப் பயிற்சிகளுக்கு அனுப்புவதற்கும் ஏதுவாக அமையும். அவசரத்திற்கு நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதாரணத்திற்கு மருத்துவமனை வெளியூர் செல்ல பேருந்து நிலையம் ரயில் நிலையம் போன்றவற்றை எளிதில் சென்றடையலாம்.

அடுக்காக குடியிருப்பில் நல்ல அசோசியேஷன் இருக்கும் என்றால் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க முடியும். இது பாதுகாப்பை மேம்படுத்தும்.

நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் நன்கு வளர்ச்சியடைந்த இடத்தில் தற்போது நாம் வாங்கும் வீட்டுமனையோ குடியிருப்போ வரும் காலத்தில் பெரிய அளவுக்கு விலை உயர்வு வராது காரணம் அது ஏற்கனவே நன்கு வளர்ந்து விட்டது இதற்கு பின்னால் அதன் வளர்ச்சி மிதமாகவே இருக்கும். எனவே இங்கு நாம் செய்யும் முதலீடு பெரிய அளவிற்கு வளராது.

புறநகர் பகுதியில் தனி மனை வாங்கி நமக்கென்று தனியாக வீடு கட்டிக் கொள்ளும் போது நாம் விரும்பிய வண்ணம் வீட்டை கட்டிக் கொள்ளலாம். மேலும் சுத்தமான காற்று தூய்மையான குடிநீர் விஸ்தாரமான வீடு என அமையும். தற்போது வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளதால் இந்த இடங்களில் முதலீடு செய்வது வருங்காலத்தில் பெரிய அளவிற்கு இவை வளர்ந்து நிற்கும்.

இவ்வாறு நாம் தேர்ந்தெடுக்கும் புறநகர் பகுதி பெரிய பள்ளிக்கூடங்கள் இருக்கும் இடமாகவும் நல்ல மருத்துவமனைகள் உள்ள இடமாகவும் நாம் பணி செய்யும் இடத்திற்கு மிக எளிதாக குறைந்த நேரத்தில் சென்று வரக்கூடிய பேருந்து ரயில் வசதிகள் இருக்கும் என்றால் சிறப்பு. இல்லையென்றால் நாம் ஏதோ தனித்து விட்டது போன்ற பிரச்சனை தான். புறநகர் பகுதியில் தனித்தனி வீடுகளாக இருக்கும் பொழுது நம் வீட்டுக்கு அருகே பக்கத்தில் உள்ளவர்களுடன் நல்ல நட்புடன் இருத்தல் வேண்டும். இது நம்முடைய பாதுகாப்பிற்கும் மகிழ்வான சூழலுக்கும் அஸ்திவாரமாக இருக்கும். பெருநகர வளர்ச்சியில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் புறநகர் பகுதி எந்த அளவிற்கு துரிதமாக வளரும் என்பதை பல கோணங்களில் சிந்தித்து விசாரித்து வாங்க வேண்டும் இல்லையென்றால் இங்கே போடும் முதலீடுகளும் பெரிய அளவுக்கு வளர்ச்சித் தராமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவே நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உங்களது சூழலுக்கு ஏற்ப உங்களிடம் உள்ள கைப் பொருளைக் கொண்டு நகரத்திற்கு நடுவே வீடு வாங்க போகிறீர்களா? புறநகர் பகுதியில் வீடு வாங்க போகிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்