ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் காவ்ஜாவின் சகோதரர் கைது
ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் காவ்ஜாவின் சகோதரர் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் உஸ்மான் காவ்ஜா. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பெற்றுள்ளார். உஸ்மான் காவ்ஜாவின் சகோதரர் அர்சகான் காவ்ஜா (வயது 39). பயங்கரவாத குற்றச்சாட்டில் தனது நண்பரை சிக்க சதி செய்ததற்காக அர்சகான் காவ்ஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய போலீசார் தரப்பில் இதுபற்றி கூறப்பட்டதாவது:-
அர்சகான் காவ்ஜாவின் பல்கலைக்கழக நண்பர் முகமது கமீர் நிஜாமுதீன். நிஜாமுதீனுக்கும், அர்சகான் காவ்ஜாவுக்கும் இடையே ஒரு பெண்ணை காதலிப்பதில் போட்டி எழுந்துள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக அர்சகான் காவ்ஜா போலீசுக்கு தகவல் அளித்தார். அது தொடர்பாக நிஜாமுதீன் டைரியிலும் தாக்குதல் இலக்கில் உள்ள நபர்கள் பட்டியல் என ஒன்றை எழுதினார்.
இதையடுத்து, நிஜாமுதீனை கடந்த ஆகஸ்ட் மாதம் போலீஸார் கைது செய்தனர். ஆனால் தனக்கும், சதித்திட்டத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நிஜாமுதீன் மறுத்தார். அதன்பின் கையெழுத்து சோதனை நடத்திய போலீஸார் அது நிஜாமுதீன் கையெழுத்து இல்லை என்பதை உறுதி செய்து அவரை விடுவித்தனர். இதையடுத்து, நிஜாமுதினை சிக்க வைத்த அர்சகான் காவ்ஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, அப்பாவியான நிஜாமுதினை விடுத்த போலீசார், அவருக்கு வழக்குகளுக்கான செலவு தொகையும் வழங்க முடிவு செய்துள்ளனர். ஆனால், கூடுதல் தொகை இழப்பீடாக கோர நிஜாமுதின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிஜாமுதின் இலங்கை பிரஜை ஆவார்.