இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷமான ஆட்டம் தொடரும் கேப்டன் மோர்கன் நம்பிக்கை

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடி அரைஇறுதியை எட்டியது.

Update: 2019-07-05 00:00 GMT
செஸ்டர்-லீ-ஸ்டிரிட்,

வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் அளித்த பேட்டியில், ‘எங்கள் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். பேர்ஸ்டோவின் சதம் வெற்றிக்கு காரணமாக இருந்தது. 25-வது ஓவருக்கு பிறகு ஆடுகளத்தின் தன்மை மாறி விட்டது. இருப்பினும் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் எடுத்த ரன்களின் மூலம் சவாலான ஸ்கோரை எட்டினோம்.

இந்த தொடரில் ஆட்டம் போக போக ஆடுகளத்தின் தன்மை மெதுவாகி விடுகிறது. இந்த நிலை நீடித்தால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுப்போம். கடந்த 2 ஆட்டங்களில் நாங்கள் பேட்டிங் செய்த விதம் கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் ஆக்ரோஷமாக ஆடி வருவதை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஆக்ரோஷமான அணுகுமுறை இனி வரும் ஆட்டங்களிலும் தொடரும் என நம்புகிறேன்’ என்றார்.

மேலும் செய்திகள்