இந்தியா-வங்காளதேசம் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் பங்கேற்கிறது. முதலில் 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் (அருண் ஜெட்லி ஸ்டேடியம்) இன்றிரவு நடக்கிறது. இந்திய அணியில், கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா அணியை வழிநடத்துகிறார்.
இதனிடையே டெல்லியில் காற்றின் மாசு அபாயகரமான அளவை தாண்டி விட்டது. அங்கு எங்கு, பார்த்தாலும் புகைமூட்டமாகவே காட்சி அளிக்கிறது. வங்காளதேச அணியில் பெரும்பாலான வீரர்கள் சுவாச கவசம் அணிந்தபடி பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இப்போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாட்டை குறைக்க வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. மேலும் போட்டியை காணவரும் ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.