வார்னருக்கு வழங்கப்பட்ட தொடர்நாயகன் விருது நியாயமற்றது... பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து

ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னருக்கு இந்த 20 ஓவர் உலககோப்பையின் தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

Update: 2021-11-15 04:20 GMT
துபாய் 

கடந்த மாதம் 17 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய 20 ஓவர் உலக கோப்பை போட்டி நேற்றுடன் முடிவடைந்தது .நேற்று நடந்த  இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. 

இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 303 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி கோப்பை  வெல்ல முக்கிய காரணமாக இருந்த அந்த அணியின் டேவிட் வார்னர் பட்டியலில் 289 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான  அரையிறுதி போட்டியில் டேவிட் வார்னர் 30 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.மேலும் நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வார்னர் 38 பந்துகளில் 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

நாக் அவுட் போட்டிகளில் அதிக அழுத்தத்தை கடந்து சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னருக்கு இந்த 20 ஓவர் உலககோப்பையின் தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் வார்னருக்கு வழங்கப்பட்ட தொடர்நாயகன் விருது  நியாயமற்றது என கூறியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது :

இந்த தொடரின் நாயகனாக பாபர் அசாம்  வருவதைக் காண மிகவும் ஆவலுடன் இருந்தேன். நிச்சயமாக இது நியாயமற்ற முடிவு .

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்