பெண்கள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி புதிய சாதனை!

இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி பெண்கள் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை படைத்தார்.

Update: 2022-03-16 10:20 GMT
Image courtesy: AFP
மவுன்ட் மாங்கானு, 

நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இன்றைய போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இந்திய மகளிர் அணி 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய சரோலெட் டீன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் விளையாடிய இங்கிலாந்து அணி 31.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி பெண்கள் ஒருநாள் போட்டி வரலாற்றில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார். 

ஜூலன் இங்கிலாந்தின் டாமி பியூமந்தை விக்கெட்டை எடுத்த போது இந்த சாதனை படைத்தார். அவர் ஏற்கனவே பெண்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனையாக முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனை கேத்ரின் பிட்ஸ்பேட்ரிக் 180 விக்கெட்டுகளை வீழ்த்தி பெண்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேலும் செய்திகள்