ஆஷஸ் 5வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு
18 டெஸ்டுகளில் வெற்றி பெறாமல் இருந்த சோகத்துக்கு இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைத்தது.;
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்றது . இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதையடுத்து 42 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. இதனால், ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 18 டெஸ்டுகளில் வெற்றி பெறாமல் இருந்த அந்த சோகத்துக்கும் இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த நிலையில், இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் இந்த போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளார்.இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.ஏற்கனவே காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.