2023 உலகக்கோப்பை: தனது முதல் ஆட்டத்தை சென்னையில் ஆட உள்ள இந்தியா...எதிரணி யார் தெரியுமா..? - வெளியான புதிய தகவல்...!
50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு இதுவரை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் 50 ஓவர் உலககோப்பை குறித்து மிக முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது உலகக்கோப்பை தொடரின் முதலாவது ஆட்டம் அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாகவும், அந்த போட்டியில் கடந்த உலகக்கோப்பையில் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோத உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கலாம் என்றும், அந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.