தோனி பாய் எனக்கு ஒரு ஆலோசனை மட்டுமே கொடுத்தார் அது தான்...- சமீர் ரிஸ்வி பேட்டி

இந்த தொடரில் சென்னை அணி ஆடிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

Update: 2024-03-29 05:55 GMT

Image Courtesy: @ChennaiIPL

சென்னை,

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 9 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் சென்னை அணி ஆடிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

முன்னதாக இந்த தொடரில் சென்னை அணிக்காக அறிமுகமான ரச்சின் ரவீந்தரா, முஸ்தபிசூர் ரஹ்மான், டேரில் மிட்சேல், சமீர் ரிஸ்வி ஆகிய நால்வருமே கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டனர். குறிப்பாக இதுவரை வேறு ஐ.பி.எல் அணிக்காகவும், இந்தியாவுக்காகவும் விளையாடாத உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி 8.40 கோடிக்கு வாங்கப்பட்டு சென்னை அணிக்காக முதல் போட்டியிலேயே அறிமுகமானார்.

ஆனால் முதல் போட்டியில் பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்காத சமீர் ரிஸ்வி, 2வது போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த போது ஐ.பி.எல் தொடரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரஷீத் கானுக்கு எதிராக சிக்சர் அடித்து அசத்தினார். அவர் அந்த ஆட்டத்தில் 6 பந்துகளில் 14 ரன் எடுத்தார்.

இந்நிலையில் தோனி பாய் எனக்கு ஒரு ஆலோசனை மட்டுமே கொடுத்தார். அதாவது இதுவரை நீங்கள் எப்படி விளையாடினீர்களோ அது தான் உங்களுடைய ஆட்டம். அதே போலவே நீங்கள் விளையாட வேண்டும் என்று கூறியதாக சமீர் ரிஸ்வி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தோனி பாய் எனக்கு ஒரு ஆலோசனை மட்டுமே கொடுத்தார். அதாவது இதுவரை நீங்கள் எப்படி விளையாடினீர்களோ அது தான் உங்களுடைய ஆட்டம். அதே போலவே நீங்கள் விளையாட வேண்டும். எந்த வித்தியாசமும் கிடையாது. எப்போதும் ஒரே திறமை தான் இருக்கும்.

மனநிலை வேண்டுமானால் கொஞ்சம் மாறலாம். எனவே விளையாடும் போது அழுத்தத்தை உணராமல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும். அப்படி செய்தாலே அழுத்தத்தை சந்திக்காமல் நீங்கள் பதற்றமடைய மாட்டீர்கள். முதல் போட்டியாக இருந்தாலும் அப்படித்தான், நீங்கள் பல வருடங்களாக விளையாடி வருகிறீர்கள் என்றார்.

ஏலத்தில் சி.எஸ்.கே அணிக்காக நான் வாங்கப்பட்ட போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எம்.எஸ்.தோனியை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கனவாகும். அவருடன் விளையாடுவதை நான் நினைத்ததே கிடையாது. தற்போது என்னுடைய கனவு முழுமையடைந்துள்ளது. இந்த சீசனில் அவரிடமும், பயிற்சியாளர்களிடமும் சிலவற்றைக் கற்றுள்ளேன். அணியிடமிருந்து முடிந்தளவுக்கு நிறைய கற்பதே என்னுடைய இலக்காகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்