ஹர்திக் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள முயல்கிறார்.. ஆனால் உண்மையில்...- பீட்டர்சன்

சொந்த ரசிகர்களே எதிர்ப்பு தெரிவிப்பதால் மனதிற்குள் வேதனையை வைத்துக்கொண்டு பாண்ட்யா சிரிப்பதுபோல் நடித்து வருவதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-15 09:21 GMT

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா இந்த சீசனுக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார். ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்ததுடன், போட்டியின்போது மைதானத்தில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

இதற்கிடையே பாண்ட்யா தலைமையில் முதல் 3 போட்டிகளில் மும்பை ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்தது. இருப்பினும் அதன் பின் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்பியது. ஆனால் நேற்று நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை மீண்டும் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திற்கு சரிந்தது. அந்த தோல்விக்கு கடைசி ஓவரில் தோனிக்கு எதிராக பாண்ட்யா 20 ரன்கள் கொடுத்ததே முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் சொந்த ரசிகர்களே எதிர்ப்பு தெரிவிப்பதால் மனதிற்குள் மிகப்பெரிய வேதனையை வைத்துக்கொண்டு பாண்ட்யா சிரிப்பதுபோல் நடித்து வருவதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை தொடர்ந்தால் பாண்டியாவின் மனநிலையும் கிரிக்கெட்டும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"டாஸ் வீசும்போது அதிகமாக சிரிக்கும் அவர் மகிழ்ச்சியுடன் இருப்பதுபோல் நடிக்கிறார். உண்மையில் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அங்கே இருந்த நான் அதைப் பார்த்தேன். அவர் நெருப்பில் இருப்பதைப் போன்ற நிலையில் இருக்கிறார். உண்மையில் இது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லலாம்.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு என்ன நடக்கிறது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள் சி.எஸ்.கே. முன்னாள் கேப்டன் தோனி மைதானம் முழுவதும் பாண்ட்யா பந்து வீச்சை அடித்து நொறுக்குவதை பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். அது பாண்ட்யாவுக்கு வலியை கொடுக்கும். ஏனெனில் இந்திய வீரரான அவர் உணர்ச்சிவசப்படுகிறார். எனவே இப்படி நடக்கும்போது அது அவரை பாதிக்கிறது. இது நடக்காமல் இருக்க வேறு ஏதாவது நடக்க வேண்டும்" என்று கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்