ஐ.பி.எல். தொடரில் சொதப்பினாலும் டி20 உலகக்கோப்பையில் அவர் அசத்துவார் - யுவராஜ்

ஐ.பி.எல். தொடரில் சுமாராக செயல்பட்டாலும் உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுவார் என்று யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-23 05:24 GMT

image courtesy: PTI

மும்பை,

இறுதி கட்டத்தை எட்டியுள்ள நடப்பு ஐ.பி.எல். தொடரில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்தது. அவருடைய தலைமையில் 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்ற மும்பை 10 தோல்விகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

அந்த அணியின் இந்த தோல்விக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேபோல கேப்டனாக முக்கிய முடிவுகளை எடுப்பதில் சொதப்பிய அவர் தோல்விக்கு முதன்மை காரணமாக அமைந்தார். அந்த நிலையில் அடுத்ததாக நடைபெறும் 2024 டி20 முதன்மை ஆல் ரவுண்டராகவும் பினிஷராகவும் அறியப்படும் ஹர்திக் பாண்ட்யா மோசமான பார்மில் உள்ளார்.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சுமாராக செயல்பட்டாலும் உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"தேர்வு நடைபெற்று முடிந்து விட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் என்ன பார்மில் இருக்கிறார்கள் என்பதை தேர்வாளர்கள் பார்த்தனர். அதே சமயம் ஐ.பி.எல். பார்ம் மட்டும் முக்கியமல்ல. ஏனெனில் நீங்கள் ஐ.பி.எல். பார்மை அடிப்படையாக பார்க்கும்போது ஹர்திக் பாண்ட்யா நன்றாக செயல்படவில்லை.

இருப்பினும் ஏற்கனவே இந்தியாவுக்காக வெளிப்படுத்திய செயல்பாடுகளின் பின்னணியை பார்க்கும்போது அவர் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும். அவருடைய பிட்னஸ் மற்றும் பவுலிங் ஆகியவை இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கும். இந்த உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்