ரஞ்சி டிராபி கிரிக்கெட்; பஞ்சாபிற்கு எதிரான ஆட்டம் - முதல் இன்னிங்சில் தமிழகம் 435 ரன்கள் குவிப்பு

தமிழகம் தரப்பில் பாபா இந்திரஜித் மற்றும் விஜய் சங்கர் இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

Update: 2024-02-17 09:11 GMT

Image Courtesy: @TNCACricket

சேலம்,

89-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி தனது கடைசி லீக்கில் பஞ்சாப்புடன் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தமிழக அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதலில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் வீரர்களில் சுரேஷ் லோகேஷ்வர் 10 ரன்களிலும், ஜெகதீசன் 22 ரன்களிலும், பிரதோஷ் ரஞ்சன் பவுல் 20 ரன்களிலும், முகமது அலி 27 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் கை கோர்த்த பாபா இந்திரஜித் - விஜய் சங்கர் இணை அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் வலுவான நிலைக்கு முன்னெடுத்து சென்றனர். சிறப்பாக விளையாடிய இந்திரஜித் சதம் விளாசினார். மறுமுனையில் விஜய் சங்கரும் அரைசதத்தை கடந்தார். இந்த இணை முதல் நாளில் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டது.

முதல் நாளில் தமிழகம் 4 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்திருந்தது. பாபா இந்திரஜித் 122 ரன்களுடனும், விஜய் சங்கர் 85 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தமிழக அணி தரப்பில் இந்திரஜித் 187 ரன்னிலும், விஜய் சங்கர் 130 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஹரிஹரன் 2 ரன், முகமது 8 ரன், சாய் கிஷோர் 20 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் 131.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 435 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் சுக்விந்தர் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து பஞ்சாப் அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்