லக்னோ அணிக்காக விளையாட காரணமே எம்.எஸ். தோனிதான் - கே.எல். ராகுல்

லக்னோ அணிக்காக தாம் விளையாட சம்மதித்ததற்கு எம்.எஸ். தோனிதான் முக்கிய காரணம் என்று கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-27 10:35 GMT

image courtesy: PTI

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட அந்த அணி ராகுல் தலைமையில் முதல் வருடத்திலேயே பிளே ஆப் சுற்றுக்கு சென்று அசத்தியது. இதனையடுத்து 2023 சீசனிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. மேலும் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ அணிக்காக தாம் விளையாட சம்மதித்ததற்கு எம்.எஸ். தோனிதான் முக்கிய காரணம் என்று கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

அதாவது 2008ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி பொறுப்பேற்றார். கேப்டன் என்பதால் எம்.எஸ். தோனிதான் சி.எஸ்.கே. அணியின் முதல் வீரராக பதிவு செய்யப்பட்டார். அதன் காரணமாக எம்.எஸ். தோனி அணிந்து விளையாடும் சி.எஸ்.கே. அணியின் தொப்பியில் 1 என்ற நம்பர் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை பலமுறை தாம் பார்த்துள்ளதாக தெரிவிக்கும் ராகுல் புதிதாக ஒரு அணிக்கு கேப்டனாக விளையாடினால் மட்டுமே 1-வது நம்பர் தொப்பி கிடைக்கும் என்பதால் லக்னோவுக்கு விளையாட சம்மதித்ததாக கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"ஐ.பி.எல். துவங்கப்பட்டது முதல் இளம் வீரர்களான நாங்கள் அது எவ்வளவு பெரிய இடம் என்பதை பார்த்தோம். கிரிக்கெட்டில் ஐ.பி.எல். எவ்வளவு பெரிய அளவுகோல் என்பதையும் அதற்கு மக்கள் எவ்வளவு அன்பு கொடுக்கிறார்கள் என்பதையும் அது எவ்வளவு பொழுதுபோக்கை கொடுக்கிறது என்பதையும் நாங்கள் பார்த்தோம். எனவே அது ஐ.பி.எல். தொடரில் நீங்கள் விளையாடுவதற்கான உந்துதலை கொடுக்கிறது. அதில் மற்ற அணிகளுக்காக நான் விளையாட துவங்கியபோது எம்.எஸ். தோனியை பார்ப்பேன்.

குறிப்பாக அவருடைய தொப்பியில் எப்போதும் நம்பர் 1 இருக்கும். ஏனெனில் அவர் சி.எஸ்.கே. அணியின் முதல் வீரர். எனவே எங்களைப் போன்ற வீரர்கள் எப்போதும் முதல் வீரராக வர முடியாது என்று நினைப்போம். இருப்பினும் ஐ.பி.எல். தொடரில் லக்னோ வந்ததும் அவர்கள் கேப்டனாக விளையாடுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? என்று என்னிடம் கேட்டனர். அவர்கள் அப்படி சொன்னதுமே கேப்டனாக விளையாடினால் எனக்கு நம்பர் 1 தொப்பி கிடைக்குமே என்று நினைத்தேன். அதனால் நான் லக்னோ அணியின் முதல் வீரராக விளையாடுகிறேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்