டிஎன்பிஎல்: திண்டுக்கல் டிராகன்ஸ் அபார பந்துவீச்சு..மதுரை 123 ரன்கள் சேர்ப்பு...!

மதுரை பாந்தர்ஸ் அணி தரப்பில் ஜெகதீஷன் கெளஷிக் 45 ரன்கள் எடுத்தார்.

Update: 2023-06-18 15:32 GMT

Image Courtesy: @TNPremierLeague

திண்டுக்கல்,

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும். கோவையில் 6 'லீக்' போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினத்தோடு அங்கு போட்டிகள் நிறைவு பெற்றன.

இந்நிலையில் திண்டுக்கலில் இன்று நடைபெற்று வரும் 2வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற திண்டுக்கல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக், ஹரி நிஷாந்த் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கார்த்திக் 4 ரன், ஹரி நிஷாந்த் 24 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஜெகதீசன் கெளஷிக் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி 45 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் 12 ரன், ஸ்வப்னில் சிங் 0 ரன், தீபன் லிங்கேஷ் 9 ரன், சுதன் கண்டேபன் 0 ரன், ஸ்ரீ அபிஷேக் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் மதுரை அணி 100 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் மதுரை அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 123 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. திண்டுக்கல் தரப்பில் சரவண குமார், சுபோத் பாத்டி தலா 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்