மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பியூமண்ட் 81 ரன்னும், எமி ஜோன்ஸ் 48 ரன்னும் எடுத்தனர்.

Update: 2024-04-05 06:02 GMT

Image Courtesy: @englandcricket

ஹாமில்டன்,

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று ஹாமில்டனில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 252 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பியூமண்ட் 81 ரன்னும், எமி ஜோன்ஸ் 48 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 253 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 196 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 56 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்