ஐ.எஸ்.எல். கால்பந்து பெங்களூருக்கு எதிராக சென்னை அணி ஆதிக்கம் செலுத்துமா? இன்று பலப்பரீட்சை

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Update: 2018-02-05 21:45 GMT
சென்னை,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

முன்னாள் சாம்பியனான சென்னை அணி இதுவரை 12 ஆட்டத்தில் விளையாடி 7 வெற்றி, 2 டிரா, 3 தோல்வியுடன் 23 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அறிமுக அணியாக களம் கண்ட பெங்களூரு 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 27 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. அந்த நம்பிக்கையுடன் இந்த போட்டியில் களம் காணும். அதேநேரத்தில் சென்னை அணியும் வலுவான நிலையில் உள்ளது.

பெங்களூரு அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. அதற்கு பதிலடி கொடுக்க பெங்களூரு அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். சொந்த மண்ணில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்த சென்னை அணி முனைப்பு காட்டும். பிளே-ஆப் சுற்றில் நீடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த ஆட்டம் குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கருத்து தெரிவிக்கையில், ‘என்னை பொறுத்தமட்டில் இந்த சீசன் நாளை (இன்று) தான் தொடங்குவதாக கருதுகிறேன். இந்த ஆட்டம் நமது அணியின் நிலையை அறியும் ஆட்டமாக இருக்கும். எல்லா அணிகளும் புள்ளி பட்டியலில் முந்துவதில் முண்டியடித்து கொண்டிருக்கின்றன. அடுத்த 17 நாட்களுக்குள் எங்களுக்கு 5 ஆட்டங்கள் இருக்கின்றன. இந்த ஆட்டங்கள் தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைவதை தீர்மானிக்கும். முக்கியமான தருணத்தில் அணியின் அனைத்து வீரர்களும் நல்ல உடல் தகுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். எந்த வீரரை களம் இறக்குவது என்பது குறித்து போட்டி நாளில் தான் முடிவு செய்யப்படும். அணி வீரர்களை டாக்டர்கள் குழு நன்கு கவனித்து வருகிறார்கள். அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன்’ என்றார்.

மேலும் செய்திகள்