நட்புறவு கால்பந்து: இந்தியா - சீனா அணிகள் இன்று மோதல்

நட்புறவு கால்பந்து போட்டியில், இந்தியா மற்றும் சீனா அணிகள் இன்று மோத உள்ளன.

Update: 2018-10-12 23:15 GMT
சுஜோவ்,

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் விதத்தில் இந்திய கால்பந்து அணி பல்வேறு நாட்டு அணிகளுடன் விளையாட திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக இந்திய அணி சீனாவுக்கு சென்றுள்ளது. இந்தியா-சீனா அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி அங்குள்ள சுஜோவ் நகரில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. உலக தரவரிசையில் 76-வது இடத்தில் உள்ள சீன அணியை, 97-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி எதிர்கொள்வது கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இரு அணிகளும் இதுவரை 17 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சீனா 12 முறை வெற்றி பெற்று இருக்கிறது. 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. இந்திய அணி ஒன்றில் கூட வெற்றி கண்டதில்லை. இரு அணிகளும் கடைசியாக 1997-ம் ஆண்டு கொச்சியில் நடந்த நேரு கோப்பை போட்டியில் சந்தித்தன. இந்த ஆட்டத்தில் சீனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய கால்பந்து அணி, சீனாவில் விளையாடுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் கருத்து தெரிவிக்கையில், ‘உலகுக்கு தான் இது நட்புறவு ஆட்டம். எங்கள் வீரர்களுக்கு அப்படியல்ல. இந்தியாவுக்காக விளையாடுகையில் எல்லா ஆட்டமும் எங்களுக்கு முக்கியமானது தான். இந்த ஆட்டத்தின் முக்கியத்துவம் குறித்து வீரர்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆசிய மண்டலத்தில் சீனா பெரிய அணியாகும். எனவே இந்த ஆட்டம் சவாலானதாக இருக்கும். எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் தான் களம் காண்கிறோம். சீனாவை விட சிறப்பாக ஆடுவோம் என்று நம்புகிறேன்’ என்றார். மேலும் இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு சந்தேஷ் ஜின்கான் கேப்டனாக செயல்படுவார் என்றும் அவர் கூறினார்.

‘என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை வழங்கிய பயிற்சியாளருக்கு நன்றி. எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை’ என்று ஜின்கான் குறிப்பிட்டார். இந்திய நேரப்படி மாலை 5.05 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1,2,3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மேலும் செய்திகள்