ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 4-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.

Update: 2018-11-05 22:15 GMT
கொச்சி,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கொச்சியில் நேற்று இரவு நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. 17-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்தார். 30-வது நிமிடத்தில் கேரளா அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் ஸ்டோஜனோவிக் இந்த கோலை அடித்தார்.

முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. மின் விளக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பின் பாதி ஆட்டம் சுமார் 15 நிமிடம் தாமதமாக தொடங்கியது. 81-வது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு 2-வது கோல் கிட்டியது. பெங்களூரு அணி வீரர் ஹெர்னாண்டஸ் கோலை நோக்கி அடித்த பந்தை கேரளா அணியின் கோல் கீப்பர் நவீன் குமார் தடுத்தார். அவரது கையில் பட்டு திரும்பிய பந்தை அந்த அணி வீரர் நிகோலா வெளியே அடிக்க முயன்றார். ஆனால் பந்து கோலுக்குள் புகுந்து சுய கோலாக மாறியது. அதன் பிறகு இரு அணியினராலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

புனேயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி-சென்னையின் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

மேலும் செய்திகள்