தமிழக கைப்பந்து அணிகளுக்கு பாராட்டு விழா

தேசிய இளையோர் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக கைப்பந்து அணிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது.

Update: 2018-01-09 22:00 GMT
சென்னை,

20-வது தேசிய இளையோர் (யூத்) கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மத்தியபிரதேசத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழக அணி 21-25, 25-21, 23-25, 25-16, 16-18 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானிடம் போராடி தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது. பெண்கள் பிரிவில் நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் தமிழக அணி 25-21, 18-25, 25-10, 25-16 என்ற செட் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக கைப்பந்து அணிகளுக்கு, தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் நேற்று பாராட்டி பரிசளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் எஸ்.வாசுதேவன், பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், நிர்வாகிகள் பாலச்சந்திரன், ஜெ.நடராஜன், பிரபாகரன், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை, காஸ்கோ உபைதுர் ரகுமான், பயிற்சியாளர்கள் கேசவன், தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்