உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய இளம் வீராங்கனை தங்கம் வென்றார்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய இளம் வீராங்கனை மனு பாகெர் தங்கம் வென்றார்.

Update: 2018-03-05 23:00 GMT
குடலாஜாரா,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்சிகோவில் உள்ள குடலாஜாராவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் 16 வயதான இந்திய வீராங்கனை மனு பாகெர் 237.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். முன்னாள் உலக சாம்பியனான மெக்சிகோவின் அலெஜான்ட்ரா ஜாவாலா 237.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், பிரான்ஸ் வீராங்கனை செலின் கோபெர்விலே 217 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி சிங் தேஸ்வால் 196.1 புள்ளிகளுடன் 4-வது இடம் பெற்றார்.

தங்கப்பதக்கம் வென்ற அரியானாவை சேர்ந்த மனு பாகெர் கருத்து தெரிவிக்கையில், ‘எனது முதல் உலக கோப்பை போட்டியிலேயே தங்கப்பதக்கம் வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வரும் போட்டிகளில் இதைவிட சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்றார்.

மேலும் செய்திகள்