சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்
சர்வதேச தடகள போட்டி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்தது. இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அவர் தனது கடைசி முயற்சியில் 83.18 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான நீரஜ் சோப்ரா 88.07 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து இருப்பது அவரது சிறந்த செயல்பாடாகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியின் மூலம் ஒலிம்பிக் தகுதி இலக்கை எட்டிய நீரஜ் சோப்ரா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டுக்கு மேலாக எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியாமல் தவித்தார். அதன் பிறகு அவர் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.