100 மீட்டர் ஓட்டத்தில் இத்தாலி வீரர் மார்செல் ஜேக்கப்சுக்கு தங்கம் உலகின் அதிவேக வீரராக உருவெடுத்தார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் உலகின் அதிவேக வீரர் யார் என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நேற்றிரவு அரங்கேறியது.

Update: 2021-08-01 21:53 GMT
டோக்கியோ, 

8 வீரர்கள் பங்கேற்ற இதில் தவறான தொடக்க ஓட்டத்தால் இங்கிலாந்து வீரர் ஜார்னெல் ஹியூக்ஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். மீதமுள்ள 7 வீரர்கள் மின்னல் வேகத்தில் ஓடினர். இதில் கணிப்புகளுக்கு மாறாக இத்தாலி வீரர் லாமோன்ட் மார்செல் ஜேக்கப்ஸ் 9.80 வினாடிகளில் முதலாவாக வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இத்தாலி நாட்டவர் ஒருவர் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும். அதிவேக வீரராக உருவெடுத்துள்ள 26 வயதான மார்செல் ஜேக்கப்ஸ் அமெரிக்காவில் பிறந்து இத்தாலிக்கு இடம்பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அமெரிக்காவின் பிரெட் கெர்லி வெள்ளிப்பதக்கமும் (9.84 வினாடி), கனடாவின் ஆந்த்ரே டி கிராஸ் (9.89 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

உசேன் போல்ட்டின் கணிப்பில் இருந்த அமெரிக்க வீரர் டிரா வோன் புரோமெல் துரதிர்ஷ்டவசமாக அரைஇறுதிசுற்றை தாண்டவில்லை. இதே போல் முன்னாள் உலக சாம்பியனான ஜமைக்காவின் யோகன் பிளாக்கும் அரைஇறுதியுடன் நடையை கட்டினார். ஒலிம்பிக் 100 மீட்டர் இறுதி சுற்றில் ஜமைக்கா வீரர்கள் யாரும் இடம் பெறாதது 2000-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.

மேலும் செய்திகள்