உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் அமித் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்

உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப்போட்டியில் இந்திய வீரர் அமித் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Update: 2021-08-21 15:34 GMT
நைரோபி,

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் உலக இளையோர் U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய தடகள வீரர் அமித் குமார். ரேஸ் வாக்கிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 

முன்னதாக பந்தய தூரமான 10,000 மீட்டரை 43 நிமிடங்கள், 17:94 நொடிகளில் கடந்து அமித் குமார் இரண்டாம் இடம் பிடித்தார். அவருடன் போட்டியில் பங்கேற்ற, கென்ய வீரர் ஹரிஸ்டோன் வானியோனி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். தொடக்கம் முதலே ரேஸில் லீட் செய்து வந்த அமித் குமார், இறுதியில் சில லேப்களில் லீடிங் செய்வதை இழந்தார்.  

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமித் குமார், “போட்டி நடைபெற்ற இடம் (நைரோபி கிட்டத்தட்ட 2000 மீட்டர்) அதிக உயரத்தில் இருந்ததால் எனக்கு மூச்சு பிரச்சினை ஏற்பட்டது. இது எனது முதல் சர்வதேச போட்டி. நான் இந்தியாவுக்கு வெள்ளி வென்றேன். குறைந்த பட்சம் இந்தியாவின் நம்பிக்கையை என்னால் நிறைவேற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்”என்று அவர் கூறினார்.

இந்த போட்டியில் அமித்தின் வெள்ளி பதக்கம், இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் ஆகும். கடந்த புதன்கிழமை நடந்த போட்டியில், இந்திய கலப்பு ரிலே அணி தொடக்க நாளில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்