டைமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார்

Update: 2024-05-10 19:38 GMT

தோகா,

கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர். ஒலிம்பிக் சாமியன் ஆன இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்றதால் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

தவிர கடந்த ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் மற்றொரு வீரர் கிஷோர் ஜெனா, முதன் முறையாக 'டைமண்ட் லீக்' போட்டியில் களமிறங்கினார்.

ஒவ்வொரு வீரருக்கும் ஆறு வாய்ப்புகள் தரப்பட்டன. முதல் வாய்ப்பில் பவுல் செய்த நீரஜ் சோப்ரா, ஆறாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 88.36 மீ., துாரம் எறிய, இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இந்த சீசனில் நீரஜ் சோப்ராவின் சிறந்த துாரமாக இது அமைந்தது.

செக் குடியரசின் ஜாகுப் வால்டெச்,அதிகபட்சமாக 88.38 மீ., துாரம் எறிந்து முதலிடம் பிடித்தார். 0.02 மீ., துாரத்தில் நீரஜ் சோப்ராவின் தங்கப்பதக்கம் நழுவியது. கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், கடைசி வாய்ப்பில் அதிகபட்சமாக 86.62 மீ., துாரம் எறிந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

மற்றொரு இந்திய வீரர் ஜெனா, மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 76.71 மீ., துாரம் மட்டும் எறிந்து, 9வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்