காயம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து பிவி.சிந்து விலகல்

இடது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து பிவி.சிந்து விலகியுள்ளார்.

Update: 2022-08-13 19:30 GMT

புதுடெல்லி,

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் இடது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகுவதாக பி.வி.சிந்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காமன்வெல்த் பேட்மிண்டன் காலிறுதிப்போட்டியின் போதே காலில் காயம் ஏற்பட்டது. பயிற்சியாளர் மற்றும் பிசியோவின் உதவியுடன் காமன்வெல்த் போட்டியில் விளையாடினேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இறுதிப்போட்டியின் போது வலி தாங்க முடியாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஐதராபாத் திரும்பியவுடன் சிந்து ஸ்கேன் செய்ததில் இடது காலில் அழுத்த முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் சில வாரங்கள் ஓய்வு எடுக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்