“நான் ஒரு தமிழச்சி’’- டிரோல்களுக்கு பதிலடி கொடுத்த பேட் கேர்ள் பட நடிகை
தன்னை இணையத்தில் டிரோல் செய்த ஒருவருக்கு நடிகை அஞ்சலி சிவராமன் பதிலளித்துள்ளார்.;
சென்னை,
வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரித்த "பேட் கேர்ள்" திரைப்படத்தில் நடித்த நடிகை அஞ்சலி சிவராமன், தன்னை மலையாளி என்று கூறி இணையத்தில் டிரோல் செய்த ஒருவருக்கு பதிலளித்துள்ளார்.
அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த ஒரு வீடியோவில், இந்த சம்பவத்தை நேரடியாகக் குறிப்பிட்டு, “நான் ஒரு தமிழச்சி. என் பெயர் அஞ்சலி சிவராமன். நீங்கள் கூகுளில் தேடினால் கூட நான் தமிழச்சி என்பது தெரிந்துவிடும். என் அம்மா சித்ரா அவர் தமிழர். என் அப்பா வினோத் சிவராமன், அவரும் தமிழர். என் முழு குடும்பமும் தமிழர்கள். ஆமாம், எனக்கு உண்மையில் தமிழ் பேசத் தெரியாது, ஆனால் எனக்கு அது புரியும்’ என்றார்.
2018 ஆம் ஆண்டு வெளியான பி.எம். செல்பிவாலி என்ற வெப் தொடருடன் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய அஞ்சலி, பின்னர் கோபால்ட் புளூவில் நடித்தார் , மேலும் ஸ்பானிஷ் வெற்றிப் படமான எலைட்டை தழுவி எடுக்கப்பட்ட நெட்பிளிக்ஸின் கிளாஸ் (2023) திரைப்படத்தில் நடித்து அங்கீகாரத்தைப் பெற்றார்.