வைரலாகும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் பதிவு
‘விடாமுயற்சி’ ரிலீஸாகியிருக்கும் நாளில் ‘சில நேரங்களில் இந்த விஷயங்கள் எப்படி நடக்கும் என நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும்போது அற்புதம் நிகழும்’ என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.;
சென்னை,
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான 'விடாமுயற்சி' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று திரையில் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.அஜித்தின் வழக்கமான மாஸ் படமாக மட்டும் விடாமுயற்சி இருக்காது என்று மகிழ் திருமேனி கூறியிருக்கின்றார். அஜித்தின் நடிப்பிற்காகவே விடாமுயற்சி திரைப்படத்தை பலமுறை பார்க்கலாம் என கூறியிருந்தார். இவ்வாறு பல விஷயங்களை கூறி விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தினார் மகிழ் திருமேனி.
இது அஜித் படமாகவும் இல்லாமல் மகிழ் திருமேனியின் படமாகவும் இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு விடாமுயற்சி இல்லை என்றும் படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகின்றது. 'விடாமுயற்சி' ரிலீஸாகியிருக்கும் நாளில் 'சில நேரங்களில் இந்த விஷயங்கள் எப்படி நடக்கும் என நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும்போது அற்புதம் நிகழும்' என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
மகிழ் திருமேனிக்கு முன்பு விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது.இதனை லைகா நிறுவனமே அதிகாரபூர்வமாகவே அறிவித்தது. ஆனால் அதன் பிறகு சில பல காரணங்களால் விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தான் மகிழ் திருமேனி அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் விடாமுயற்சி இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு வைரலாகி வருகின்றது.
கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.கடந்த 2022-ம் ஆண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.