ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது - ஆர்.ஜே. பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யாவின் 45-வது படத்திற்கு 'கருப்பு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ''கருப்பு'' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கருப்ப சாமியின் அரிவாள், வேல் முன்பு அரிவாள் ஏந்தியபடி சூர்யா நிற்கும் போஸ்டர் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 'கருப்பு' படத்தின் டைட்டில் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்புக்கு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். 'நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து தயாராகி வருகிறது' என்று 'கருப்பு' படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி அப்டேட் அளித்துள்ளார்.