'' 'மான் கராத்தே' பட விழாவில் அப்படி பேசியதற்கு டிரோல் செய்யப்பட்டேன், ஆனால் இன்று... '' - சிவகார்த்திகேயன்
''மதராஸி'' படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
நேற்று நடைபெற்ற மதராஸி படத்தின் டிரெய்லர் மற்ரும் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இதற்கு இசை அமைக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அனிருத், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில்,
" 'மான் கராத்தே' பட ஆடியோ வெளியீட்டு விழாவில், நான் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஷங்கர் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று சொன்னபோது டிரோல் செய்யப்பட்டேன். இன்று நான் முருகதாஸின் ''மதராஸி'' படத்தில் நடித்துள்ளேன். என்னை இங்கு அழைத்து வந்த அனைத்து ரசிகர்களின் ஆதரவிற்கும் நன்றி" என்றார்.