இளையராஜா- யுவன் முதல் முறையாக இணைந்து பாடிய பாடல்
சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் ‘கொம்புசீவி’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது;
சென்னை,
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மதுர வீரன், படை தலைவன் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013ம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்கி மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.அடுத்ததாக பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த இக்கதையில், ரவுடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகா என்பவரும் நடித்துள்ளனர். தார்னிகா நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் 1996 -ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தன. தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் நிறுவனம் கொம்புசீவி படத்தின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது..‘கொம்புசீவி’ படத்தின் ‘உன்ன நான் பாத்தா’ வீடியோ பாடலை யுகபாரதி வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருந்தார்.
இந்நிலையில் , ‘கொம்புசீவி’ திரைப்படத்தில் இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர். கவிஞர் பா விஜய் வரிகளில் உருவான "அம்மா என் தங்ககனி,நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்" என்ற உணர்வுபூர்வமான பாடலை இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து மிகவும் சிறப்பாக பாடியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்பாடல் 'கொம்புசீவி' படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.