சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள்: வீடியோ வெளியானதில் தர்ஷன் மனைவிக்கு தொடர்பா?
நடிகர் தர்ஷனின் மனைவி விஜய லட்சுமி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.;
பெங்களூரு,
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகளுக்கு டி.வி., செல்போன், மதுபானம் உள்ளிட்ட சொகுசு வசதிகள் செய்து கொடுத்து இருப்பதாக கூறி வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் உள்ள தர்ஷனுக்கு சொகுசு வசதி செய்து கொடுக்க சிறை அதிகாரிகள் மறுத்ததால், அந்த வீடியோவை தர்ஷனின் நண்பரான தன்வீர் வெளியிட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர்.
இதுதொடர்பாக பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடிகர் தன்வீரை நேரில் அழைத்து விசாரித்தனர். 2-வது முறையாக அவரை நேரில் அழைத்து போலீசார் விசாரித்த போது, சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது தொடர்பான வீடியோ தனக்கு வந்ததாகவும், ஆனால் அந்த வீடியோவைதான் வெளியிடவில்லை என்றும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவை தர்ஷனின் மனைவி விஜயலட்சுமியிடம் கொடுத்ததாகவும் அவர் வெளியிட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் விஜயலட்சுமிக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.