விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் நலன் குமாரசாமி
இயக்குநர் நலன் குமாரசாமி, விஜய் சேதுபதியுடன் இணையும் புதிய படத்திற்கு ‘கைநீளம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.;
'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி நல்ல வசூல் செய்து வருகிறது. இதனிடையே தனது அடுத்த படங்களின் திட்டம் குறித்து பேசியிருக்கிறார் நலன் குமாரசாமி.
நலன் குமாரசாமி, “அடுத்ததாக நாயகியை முன்னிலைப்படுத்தி ‘சாமுண்டீஸ்வரி’ என்ற படம் பண்ணும் திட்டம் இருக்கிறது. அதன் பட்ஜெட் 20 கோடி வரை வரும். அதனை முடித்துவிட்டு மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணையவுள்ளேன். சில வருடங்களுக்கு முன்பு, விஜய் சேதுபதி படத்துக்கான கிளைமேக்ஸ் காட்சி மட்டும் அமையவே இல்லை. அதற்காக 15 பேர் வரை ஒன்றுகூடி பேசினோம். ஆனால், அது கிடைக்காமல் இருந்தது. தற்போது அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை முடிவு செய்துவிட்டேன். ‘கைநீளம்’ என்பது தான் அப்படத்தின் தலைப்பு” என்று தெரிவித்துள்ளார்.