சலார் 2: 'சிரிப்பை நிறுத்த முடியவில்லை'- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு

படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது

Update: 2024-05-26 07:35 GMT

சென்னை,

'கே.ஜி.எப்' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்தார். மேலும், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்தார். கே.ஜி.எப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து இப்படத்தின் 2-வது பாகம் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக சலார் 2 படம் கைவிடப்பட உள்ளதாக வதந்திகள் பரவி வந்தன. இயக்குனர் பிரசாந்த் நீலுக்கும் பிரபாசுக்கும் இடையே சில கருத்து மோதல்கள் ஏற்பட்டதாகவும் அதனால்தான் ஜுனியர் என்.டி.ஆர் படத்தை இயக்கும் முடிவிற்கு பிரசாந்த் நீல் சென்றதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதனுடன் பகிர்ந்த பதிவில், 'அவர்களால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை' என்று தெரிவித்து இருக்கிறது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்