பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்கவில்லை: நடிகை மஞ்சு வாரியர்
கோர்ட்டின் மீது நம்பிக்கை இல்லாமல் போனது என்று நடிகை மஞ்சு வாரியர் கூறினார்.;
கொச்சி,
மலையாள பிரபல நடிகையும், நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியுமான மஞ்சு வாரியர் கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகை பாலியல் வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அந்த செயலை திட்டமிட்டு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி வருகின்றனர். ஆகவே, உரிய நீதி கிடைக்கவில்லை.
எனவே, சதி திட்டம் தீட்டி நிறைவேற்றியவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் உண்மையான நீதி நிலைநாட்டப்படும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடிகை என்னிடம் கூறுகையில், இந்த தீர்ப்பு எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.
முன்பே கோர்ட்டின் மீது நம்பிக்கை இல்லாமல் போனது. நாட்டில் சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் அல்ல என்று இந்த சம்பவம் மூலம் உணர்ந்து கொண்டேன். கோர்ட்டில் எனது உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட நடிகை கூறியது என்னை வருத்தமடைய செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.