ஆண்களின் பிரச்சினையை பேசும் படத்தை பெண்களும் ஏத்துகிட்டாங்க..- "ஆண்பாவம் பொல்லாதது" படக்குழு
ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.;
திருவண்ணாமலை,
ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படம் கடந்த 7ந் தேதி வெளியானது. இதனை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
கணவன் - மனைவி உறவை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் படக்குழுவினர் சிறப்பு வழிபாடு செய்தனர். அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் கதாநாயகன் ரியோ ராஜ் மற்றும் படக்குழுவினருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் உள்ள சக்தி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் கண்டு ரசித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ஆண்களுக்கு உள்ள பிரச்சினைகளை யாரும் படமாக எடுப்பதில்லை. ஆனால் நாங்கள் இந்த படத்தை எடுத்துள்ளோம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உள்ள பிரச்சினையை சரிபாதியாக கூறியுள்ளோம். அதனை இருவருமே ஏற்றுக் கொண்டதால் அதிகப்படியான வரவேற்பு கிடைத்ததாகவும், முதல் முறையாக ஆண்களைப் பற்றி பேசும் படமாக உள்ளதாகவும் இதனைப் பெண்களே ஏற்றுக் கொண்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.