ஆடிப் பிறப்பு.. அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடிமாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.;

Update:2025-07-17 12:14 IST

தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் ஆடி செவ்வாய், ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி நிறை புத்தரிசி பூஜை, ஆடி களபபூஜை போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

ஆடி மாதத்தில் நடக்கும் இந்த முக்கிய விசேஷ நாட்களில் அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபடுவார்கள். மேலும் இந்த ஆடி மாதத்தில் பெண் பக்தர்கள் அம்மனுக்கு கொழுக்கட்டை, கூழ் படைத்து வழிபடுவார்கள்.

அம்மன் கோவில்களில் ஆடி மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன்கோவில்களில் நடைபெறும் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் பெருமளவு திரள்வார்கள். அப்போது பெண் பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

ஆடிப்பிறப்பு

இவ்வளவு ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆடி மாதம் இன்று பிறந்துள்ளது. ஆடி முதல் நாள் பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக கோவில்களில் இன்று காலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ஆடி பிறப்பையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி அவ்வையாரம்மன் கோவில், பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், சுசீந்திரம் தெப்பக்குளம் கருங்காளி அம்மன் கோவில், கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் பகுதிகளில் உள்ள முத்தாரம்மன் கோவில், சந்தன மாரியம்மன் கோவில், உச்சினி மாகாளியம்மன், சுந்தரி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன.

ஆடி மாத பிறப்பை யொட்டி தாழக்குடியில் உள்ள அவ்வையாரம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடிமாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விசுவரூப தரிசனமும் நடந்தது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடந்தது.

அதன்பிறகு உஷ பூஜையும் உஷ தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் 11 மணிக்கு அம்மனுக்கு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு ஸ்ரீபலிபூஜை மற்றும் நிவேத்திய பூஜையும் நடக்கிறது.

பின்னர் அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், கோவில் மேல்சாந்திகள் மற்றும் கீழ் சாந்திகள் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்