திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது
கடந்த ஆண்டை போலவே 21-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கவில்லை.;
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தீபாவளிக்கு மறுநாள் தொடங்கி 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம்.
கடந்த காலங்களில் தீபாவளிக்கு மறுநாள் கந்த சஷ்டி தொடங்கியதால் தீபாவளி அன்று மதியத்திற்கு மேல் பக்தர்கள் வந்து கோவிலுக்குள் வந்து போட்டி போட்டு இடம் பிடிப்பார்கள். பின்னர் மறுநாள் காலையில் காப்பு கட்டி விரதம் தொடங்குவார்கள்.
இந்த நிலையில் வருகின்ற 20-ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி வருகிறது. ஆகவே கடந்த ஆண்டை போலவே மறுநாள் 21-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கவில்லை. மாறாக ஒருநாள் கழித்து 22-ந் தேதி (புதன்கிழமை) காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. இதனால் தீபாவளி அன்று மதியத்திற்கு மேல் கோவிலுக்கு வந்து இடம் பிடிக்க அவசியமில்லை.
தீபாவளியை வீட்டில் கொண்டாடிவிட்டு மறுநாள் 21-ந் தேதி கோவிலுக்கு வந்து இடம் பிடிக்கலாம். என்ற நிலை உள்ளது. வருகின்ற 22-ந் தேதி தொடங்க கூடிய கந்த சஷ்டி திருவிழாவானது 28-ந் தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேல் வாங்குதல் நடக்கிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 27-ந் தேதி (திங்கட்கிழமை) சூரசம்ஹார லீலை கோலாகலமாக நடக்கிறது. மறுநாள் 28-ந் தேதி காலையில் சட்டத் தேர் பவனி, மாலையில் பாவாடை தரிசனம், மூலவருக்கு தங்க கவசம் அணிவிப்பு நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.