திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்தவுடன் காலை 9 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.;
திருப்பதி மாவட்டம் திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வருகிற 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
இதனை முன்னிட்டு நேற்று காலை பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. கோவில் வளாகம் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் வாசனைப்பொருட்கள் கலந்த புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை.
ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்தவுடன் காலை 9 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆர்ஜித சேவைகள் ரத்து
பவித்ரோற்சவத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து 5-ந் தேதி பவித்ர பிரதிஷ்டை, 6-ந் தேதி பவித்ர சமர்ப்பணம், 7-ந் தேதி பூர்ணாஹூதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளை முன்னிட்டு, நாளை முதல் வருகிற 7-ந் தேதி வரை கோவிலில் நடைபெறும் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, பிரேக் தரிசனம் உள்ளிட்ட சில ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.