கிருஷ்ண ஜெயந்தி விழா: கம்பத்தில் பால்குட ஊர்வலம்
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கம்பம் யாதவர் நவநீத கிருஷ்ணன் மடாலய வளாகத்தில் வேணுகோபால கிருஷ்ணனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.;
கம்பத்தில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, கிருஷ்ணன் பிறந்த நாளான ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கம்பம் யாதவர் நவநீத கிருஷ்ணன் மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் வேணுகோபால கிருஷ்ணனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
பாலாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றன. இதனை தொடர்ந்து யாதவ சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் பொங்கல் பானையுடன் ஊர்வலமாக சென்றனர். கம்பம் மாலையம்மாள்புரத்தில் தொடங்கி யாதவர் தெரு, செக்கடி தெரு, போக்குவரத்து சிக்னல் வழியாக கம்பம் கம்பராயப் பெருமாள் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பின்னர் கம்பராயப்பெருமாள் கோவில் உள்ள கிருஷ்ணனின் வாகனமான கருடாழ்வாரை, நவநீதகிருஷ்ண மடாலயத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலுக்கு மேளதாளத்துடன் அழைத்து வந்தனர். கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணன், ராதை, நரசிம்மர் வேடம் அணிந்து வந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.