பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: கஜமுக அசுரனை வதம் செய்த கற்பக விநாயகர்

தெப்பக்குளம் முன்பு நடைபெற்ற நிகழவில் அசுரனை, யானை தந்தத்தால் கற்பக விநாயகர் வதம் செய்தார்.;

Update:2025-08-24 12:11 IST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி நாள்தோறும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 6-ம் நாள் விழாவான நேற்று மாலை கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது.

இதையொட்டி விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் மூலவரிடம் இருந்து, யானை தந்தம் எடுத்து வரப்பட்டு விநாயகரிடம் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து கோவில் கிழக்கு கோபுரத்தில் இருந்து வெள்ளி ரதத்தில் யானை வாகனத்தில் இருந்தபடியே கற்பகவிநாயகர் புறப்பட்டு, கோவிலை வலம் வந்தார். கோவில் தெப்பக்குளம் முன்பு விநாயகரை வரவேற்கும் விதமாக பெண்கள் பூக்கோலமிட்டு இருந்தனர்.

இரவு 7 மணிக்கு தெப்பக்குளம் முன்பு கஜமுக அசுரனை, யானை தந்தத்தால் கற்பக விநாயகர் வதம் செய்தார். அவருக்கு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தசரினம் செய்தனர்.

சதுர்த்தி விழாவின் 7-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவில் மயில் வாகனத்திலும், நாளை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் விநாயகர் எழுந்தருள்கிறார். 9-ம் நாளான 26-ந் தேதி மாலையில் தேரோட்டம் நடக்கிறது.

ஆண்டுக்கு ஒரு முறை சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் கற்பகவிநாயகர் காட்சியளிக்கும் வைபவம் அன்று நடைபெறும். அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பகவிநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

10-ம் நாளான 27-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருள்கிறார். கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து உச்சிகால சிறப்பு பூஜைகள் மற்றும் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி பழனியப்ப செட்டியார், நச்சாந்துபட்டி குமரப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்