மும்பை விமான நிலையத்தில் 16 அரிய வகை பாம்புகள் மீட்பு - பயணி கைது
மும்பை விமான நிலையத்திற்கு கடத்தி கொண்டுவரப்பட்ட 16 அரிய வகை பாம்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
மும்பை:
தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது.
இந்த சோதனையில், தாய்லாந்தில் இருந்து மும்பை வந்த ஒரு பயணி 16 அரிய வகை பாம்புகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பயணியின் உடைமைகளில் இருந்து 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மீட்கப்பட்டன. அதில் 16 உயிருள்ள பாம்புகள் நிரப்பப்பட்ட பருத்தி பைகள் இருந்தன, அவற்றில் இரண்டு கென்ய மணல் போவாக்கள், ஐந்து காண்டாமிருக எலி பாம்புகள், மூன்று அல்பினோ பாம்புகள், இரண்டு ஹோண்டுரான் பால் பாம்புகள், ஒரு கலிபோர்னியா கிங்ஸ்னேக், இரண்டு கார்டர் பாம்புகள் மற்றும் ஒரு அல்பினோ எலி பாம்பு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து அரிய வகை பாம்புகளை கடத்திய பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.