மெகுல் சோக்சியை நாடு கடத்த பெல்ஜியம் கோர்ட்டு ஒப்புதல்
மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.;
புதுடெல்லி,
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர். இதில் மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு பெல்ஜியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மெகுல் சோக்சியை நாடு கடத்தக்கோரும் வழக்கு ஆன்ட்வர்பில் உள்ள கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சி.பி.ஐ.யின் உதவியுடன் பெல்ஜியம் சட்ட அதிகாரிகள் வலுவான வாதத்தை எடுத்து வைத்தனர். இதை ஏற்று மெகுல் சோக்சியை நாடு கடத்த பெல்ஜியம் கோர்ட்டு ஒப்புதல் அளித்து உள்ளது.
இனி அங்குள்ள சுப்ரீம் கோர்ட்டில் சோக்சி மேல்முறையீடு செய்ய முடியும். அங்கும் அவரது நாடு கடத்தலுக்கு ஒப்புதல் கிடைத்து விட்டால், அவர் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.